ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய கப்பல்களுக்கு மாத்திமே தடை – ஈரான் அறிவிப்பு

0
68

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடும் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து ஈரான் முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை மீதான கவனம் அதிகரித்துள்ளது.

உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான பாதையாக ஹார்முஸ் நீரிணை விளங்குகிறது. சவுதி அரேபியா, ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எண்ணெய் கொண்டு செல்ல இந்தக் கடல் பாதை முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடும் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருந்த நிலையில் அதுகுறித்து ஈரான் முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லத் தடையில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் இந்தக் கடற்பாதை மூடப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இந்த அறிவிப்பு, இந்தியாவுக்கு நிம்மதியை அளித்துள்ளதாக சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் பெரும்பகுதி இந்தக் கடற்பாதை வழியாகவே வருகிறது. மேலும் ஈரான் இந்தியாவின் நட்பு நாடாக இருப்பதால் எண்ணெய் விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டிருந்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருக்கும் அபாயம் இருந்தது. தற்போது ஈரானின் இந்த நிலைப்பாடு இந்தியாவின் பொருளாதார பாதுகாப்பிற்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் போர் சூழல் தொடர்ந்துவருவதால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை நீடிக்கிறது. இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில் இந்திய கடற்படை அப்பகுதி நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.