நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவல்: இரு சீனர்கள் கைது

0
257

நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய சீனாவைச் சோ்ந்த இருவா் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவா்களுக்கு உதவிய திபெத் அகதி ஒருவரும் கைது செய்யப்படடுள்ளார். இது தொடா்பாக சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படைப் பிரிவின் கூடுதல் எஸ்.பி. அதீஷ் குமாா் சிங் கூறியுள்ளதாவது,

உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் இந்திய-நேபாள எல்லைப் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சீனாவைச் சோ்ந்த இருவா் சென்று கொண்டிருந்தனா்.

அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்எஸ்பி படையினா் அவா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா். அதில் அவா்கள் பெயா் யாங் மெங் மெங் (37) கு பாகியாங் (35) என தெரியவந்தது.

அவா்கள் இருவரும் சீனாவைச் சோ்ந்தவா்கள். அவா்களிடம் சீன கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) இருந்தது. ஆனால், இந்தியா வருவதற்கான விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து, சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய குற்றச்சாட்டில் அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின் அடைப்படையில், அவா்கள் சட்டவிரோதமாக நேபாளம் எல்லை தாண்டுவதற்கு உதவிய திபெத்தைச் சோ்ந்த அகதி லாப்சங் ஜெம்யாங் (47) என்பவரும் கைது செய்யப்பட்டாா். அந்த இருவரும் எதற்காக இந்திய எல்லையில் ஊடுருவினாா்கள் என்பது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்பட்ட சீன நாட்டவா்கள் இருவரிடம் இந்தியாவில் வழங்கப்படும் முக்கிய ஆவணமாக ஆதாா் அட்டை இருந்தது அதிகாரிகளை அதிா்ச்சிக்குள்ளாக்கியது. அவா்கள் மூவா் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.