முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி காட்டுங்கள் – ஜே.வி.பி.க்கு பொதுஜன பெரமுன சவால்

0
122

நல்லாட்சி காலத்தில் மாகாணசபைத் தேர்தல் மாயமாவதற்கு ஜே.வி.பியும் துணை நின்றது. இன்று ஜனநாயகம் பற்றி பாடமெடுக்கும் அக்கட்சி முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தி காட்ட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் செயலாளர் இவ்வாறு வலியுறுத்தினார். ’30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த பிறகு வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவர்களுக்குரிய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்குரிய வாய்ப்பை மஹிந்த ராஜபக்ச ஏற்படுத்திக் கொண்டுத்தார். தோல்வியென தெரிந்தும் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி சபையை ஸ்தாபித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. என்பன இணைந்தே 2015 இல் நல்லாட்சியை உருவாக்கின. எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எழுச்சிக்கு அஞ்சி மாகாண சபைத் தேர்தல் காணாமல் ஆக்கப்பட்டது. அரசுக்குரிய மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இல்லாதபோது அதற்கு ஜே.வி.பி. ஆதரவளித்தது.

அந்தவகையில் தேர்தலை பிற்போடும் சூழ்ச்சிக்கு ஜே.வி.பியும் துணை நின்றுள்ளது. இன்று ஜனநாயகம் பற்றி அக்கட்சியினர் பாடமெடுக்கின்றனர். முடிந்தால் தேர்தலை நடத்திக் காட்ட வேண்டும்.” எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.