இரண்டு மாதங்களுக்குள் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பில் தான் குடியிருக்க தற்போது புதுப்பிக்கப்பட்டு வரும் ஒரு வீட்டை அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விதிமுறைகளின்படி, அரசாங்க வீட்டில் வசிக்கும் எவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன் மூன்று மாத அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும் அரசாங்க வீட்டை விட்டு வெளியேற இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகாது எனவும் அவர் வலயுறுத்தியுள்ளார்.
சீரமைப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிந்தால் அதற்கும் குறைவான காலப்பகுதியில் அரசாங்க வீட்டில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு செய்து கொண்டு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலிருந்து தான் குணமடைந்து வருவதாகக் கூறிய அவர் மேல் மாடியிலிருந்து கூட கீழே நகர முடியவில்லை என்றார்.
“சில புதுப்பித்தல் பணிகள் செய்ய வேண்டிய ஒரு சிறிய வீட்டைக் கண்டுபிடித்தேன். என் மகன் ஒரு வாரம் வந்து எனக்கு உதவுவதாகச் கூறியுள்ளார்.
இதற்கிடையில் மூன்று வாரங்களுக்கு முன்பு, நான் விழுந்து என் இடுப்பு எலும்பு முறிந்தது. எனக்கு இடுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய அறுவை சிகிச்சை.
எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பிசியோதெரபி செய்ய வேண்டியுள்ளது. எனவே அந்த புதிய வீட்டில் தற்போது என்னால் நகரவோ அல்லது எந்த வேலையும் செய்யவோ முடியாது” என்று அவர் கூறினார்.
புதிய சட்டம் இயற்றப்படும் வரை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை செலுத்தி தனது வாழ்நாள் முழுவதும் தற்போதைய இடத்தில் வாழ அனுமதி கேட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார்.
எனினும் அது மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ஓய்வு பெற்ற பிறகு அது தனது அதிகாரப்பூர்வ இல்லமாக ஒதுக்கப்பட்ட பிறகு அதைப் புதுப்பித்தல், பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்காக ஏற்கனவே 14 மில்லியன் ரூபாய் செலுத்திவிட்டதாகவும் கூறினார்.
“நான் இங்கு வந்தபோது இங்கே ஒரு புல் கூட இருந்திருக்கவில்லை. அது வெறும் சரளைக் கற்கள் மட்டுமே. நான் நிலத்தோற்றப் பணிகளைச் செய்து முடித்தேன். அந்த நேரத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதற்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டது” என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான எனது கடிதப் பரிமாற்றத்தில் ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தற்போதைய அரசாங்கத்தால் விசாரிக்கப்படாத ஒரே நபர் தான் என்று அவர் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
“நான் எந்தத் தவறும் செய்யவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “எனக்கு கொழும்பில் வீடு இல்லை. என்னுடைய ஒரே வீடு ரோஸ்மீட் பிளேஸில் இருந்தது. நான் அதை விற்றுவிட்டேன். அந்தப் பணத்தில் நான் வாழ்கிறேன். நான் ஊழலில் ஈடுபடவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.