அமெரிக்க விசேட படையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (63), நேற்று (5) நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் ஊடாக தமது கருத்துகளை முன்வைத்த மதுரோ “நான் நிரபராதி. நான் ஒரு கண்ணியமான மனிதன். இப்போதும் நான் தான் எனது நாட்டின் ஜனாதிபதி,” என உரத்த குரலில் தெரிவித்தார்.
நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் மீது போதைப்பொருள் பயங்கரவாதம், கொக்கேய்ன் கடத்தல் சதி மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட நான்கு முக்கிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
63 வயதான மதுரோ, போதைப்பொருள் பயங்கரவாதம், கொக்கேய்ன் இறக்குமதி சதி மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருந்தமை உள்ளிட்ட நான்கு குற்றவியல் குற்றச்சாட்டுகளில் நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று ஒப்புக்கொண்டார்.
இந்தநிலையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் வெனிசுவேலாவின் வளமான எண்ணெய் இருப்புக்கள் மீதான ஏகாதிபத்திய திட்டங்களுக்கான முகமூடி என்று கூறி மதுரோ நீண்ட காலமாக இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.
இதேவேளை வெனிசுவேலா தலைநகர் காரகாஸில் நேற்று அறிவிக்கப்பட்ட அவசர கால உத்தரவின்படி, அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு ஆதரவளித்தவர்களை தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



