தமிழ் சினிமாவின் இமயம் என அழைக்கபப்டும் இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவப்பு ரோஜாக்கள், கிழக்கு சீமையிலே, முதல் மரியாதை, வேதம் புதிது என தனது படைப்புகளால் இந்திய சினிமாவையே கவனிக்க வைத்த இயக்குநர் பாரதிராஜா.
இந்நிலையில் தனது மகன் மனோஜ் மறைவுக்கு பின்னர் இயக்குநர் பாரதிராஜா, மனமுடைந்து போயிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஒரு சில மாதங்களாக பாரதிராஜா மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். அதன்பிறகு மீண்டும் சென்னை திரும்பினார். கடந்த மாத இறுதியில் உடல்நலக்குறைவால் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாரதிராஜாவுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.



