திருமண நிச்சயதார்த்தம் ஒன்று நிகழ்நிலையில் நடைபெற்ற சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா காலத்தில் மட்டுமே இப்படியான திருமணங்கள் இடம்பெற்ற நிலையில் தற்போது நிகழ்நிலையில் இடம்பெற்ற திருமண நிச்சயதார்த்தம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கனடாவில் பணிபுரியும் மணமகனுக்கு இந்தியாவில் உள்ள மணமகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் நிச்சயதார்த்தத்தை நேற்று நடத்தத் திட்டமிட்டனர். எனினும் மணமகனுக்கு கனடாவில் விடுமுறை கிடைக்காததால் அவர் நேரில் வர முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து திட்டமிட்டபடி இந்தியாவில் மணமகள் வீட்டாரின் ஊரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பிரமாண்ட திரை அமைக்கப்பட்டு கனடாவிலிருந்து மணமகன் நிகழ்நிலை மூலம் கலந்து கொண்டார்.
மணமகள் மேடையில் அமர்ந்திருக்க திரையில் தோன்றிய மணமகனுடன் பிராமண சம்பிரதாய முறைப்படி நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்ற நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.






