மரணித்த பௌத்ததுறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப்பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு மாநகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா மாநகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சு.காண்டீபன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது சபையின் உறுப்பினர் முகமட் முனவ்வர் வவுனியா தர்மலிங்கம் வீதியின் முகப்பில் உள்ள காணியில் இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் தூபி ஒன்றைஅமைப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு கோரியிருந்தார்.
அந்த பகுதியில் பள்ளிவாசல் இருப்பதால் அதனை அமைப்பதற்கு அந்த இடம் பொருத்தமானதாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.
இதன்போது எழுந்த துணை முதல்வர் கார்த்தீபன் அந்த பகுதியில் மரணித்த ஊடகவியலாளர்களிற்கான ஒரு பொது நினைவுத் தூபியினை நிறுவுவதற்கான அனுமதியை ஏற்கனவே நான் கோரியுள்ளேன்.
தற்போது பள்ளி அமைந்துள்ள பகுதியானது மதராசா பாடசாலை ஒன்றுக்காவே அந்த காலப்பகுதியில் வழங்கப்பட்டது. தற்போது பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அதனை சுற்றியுள்ள இடங்களை நீங்கள் உரிமை கோர முடியாது என தெரிவித்தார்.
இதன்போது எழுந்த மற்றொரு உறுப்பினரான லலித் ஜெயசேகர அண்மையில் மரணித்த பௌத்தபிக்கு ஒருவருக்கு சிலை அமைப்பதற்கு வவுனியா நகரில் இடம் ஒன்றை வழங்குமாறு தாழ்மையான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் காண்டீபன் சிலைகள் அமைப்பது தொடர்பாக முழுமையான தீர்மானத்திற்கூடாகவே செல்ல முடியும். சபை அங்கீகரித்து ஆளுனர் வரையில் அந்த விடயம் செல்லவேண்டும்.
எழுத்தில் மாத்திரம் கோரிக்கைகளை தருவதால் பயன் இல்லை. எனவே சமூகங்களிற்கிடையில் பிரச்சனைகளை ஏற்ப்படுத்த வேண்டாம்.
ஏற்கனவே எம்.ஜி.ஆர் சிலை ஒன்றை அங்கு வைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு அது தடுக்கப்பட்டிருந்தது. எனவே விண்ணப்பங்களை கோருவோர் முழுமையான தகவல்களை வழங்கி அதனை சபைக்கு சமர்பிக்குமாறு தெரிவித்திருந்தார்.