ஹமாஸ் தாக்குதலில் காதலி பலி; காதலன் தற்கொலை!

0
41

ஹமாஸ் தாக்குதலில் காதலி உயிரிழந்ததை அடுத்து 30 வயதான காதலன் தன்னுயிரை மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,

இஸ்ரேலை சேர்ந்த இளைஞர் ரோயி ஷலீவ் (வயது 30). இவரது காதலி மபெல் ஆடம். 2023 அக்டோபர் 7ம் தேதி ரோயி ஷலிவ் தனது காதலி மபெல் ஆடம் மற்றும் தனது நண்பர் ஹிலி சாலமோனுடன் கிப்ருட்ஸ் பகுதியில் நடைபெற்ற நோவா இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிலையில் திடீரென இசை நிகழ்ச்சிக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ரோயி ஷலீவ்வின் கண்முன்னே அவரது காதலி மபெல் ஆடம் கொல்லப்பட்டார்.

ஹமாஸ் ஆயுதக்குழுவின தாக்குதலில் ரோயி ஷலீவ் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்நிலையில் ஹமாஸ் தாக்குதலில் காதலி மபெல் ஆடல் உயிரிழந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் ரோயி ஷலீவ் நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 2 ஆண்டுகளாக ரோயி ஷலீவ் காதலியில் நினைவாகவே இருந்துள்ளார். கடந்த அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2ம் ஆண்டு அஞ்சலி அனுசரிக்கப்பட்ட நிலையில் ரோயி ஷலீவ் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை (அக்.10) டெல் அவிவ் நகரில் தனது வீட்டின் அருகே காருக்குள் இருந்தவாறு ரோயி ஷலீவ் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். ஹமாஸ் ஆயுதக்குழுவால் காதலி மபெல் ஆடம் கொல்லப்பட்ட நிலையில் 2 ஆண்டுகள் கழித்து ரோயி ஷலீவ் தன்னுயிரை மாய்த்துக்​கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை 2023 அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலில் மபெல் ஆடம் கொல்லப்பட்ட சில நாட்களில் ரோயி ஷலிவ்வின் தாயாரும் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் தற்போது காதலனும் உயிரி மாய்த்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.