இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜெருசலேம் நகரில் துப்பாக்கிச் சூடு
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் 2 வது முறையாக மேலும் 2 நாள் நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, ஹமாஸ் படையினர் 63 இஸ்ரேலியர்கள் மற்றும் 20 வெளிநாட்டினரை விடுதலை செய்துள்ளனர், இதற்கு மாற்றாக 180 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலிய நகரான ஜெருசலேமில் உள்ள பேருந்து நிலையத்தில் அல்-கஸ்ஸாம் படைகளை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி இருப்பதாக ஹமாஸ் ராணுவ படையின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
3 பேர் உயிரிழப்பு
பேருந்து நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூடு திடீர் தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 6 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில், பேருந்து நிலையத்தில் முன் நிறுத்தப்பட்ட காரில் இருந்து இறங்கிய இரண்டு பேர் அங்கு நின்று கொண்டு இருந்த பயணிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதை பார்க்க முடிகிறது.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொலிஸார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் பயங்கரவாதிகளை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.