வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்கழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று (23) காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட மட்டக்களப்பு அமிர்கழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்பு பெற்ற இந்த ஆலயத்தின் இன்று (23) அதன் இரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வெளிவீதி பஞ்ச பஞ்சமுக விநாயர் தேரில் ஆரோகணிக்க அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று பெண்கள், ஆண்கள் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும் ஆடி அமாவாசை பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக்கொண்ட பெருமையினையும் கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்து வருகின்றது.
அனுமன் இலங்காபுரியை எரித்தபோது தனது வாலினை நனைத்து கோபம் தனிந்த ஆலயம் என்ற இதிகாச புராணக் கதையினைக் கொண்டதாகவும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்று சிறப்பு காணப்படுகின்றது.
இத்தனை சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்கழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் நாளை (24) நண்பகல் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளது.
