தென்னிலங்கையில் மாயமான சிறுமி யாழில் கண்டுபிடிப்பு!

0
1311

கண்டி-கலஹா-ஹயிட் தோட்டத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி 6 நாள்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

இராசலிங்கம் பிரியதர்சினி என்ற 14 வயது சிறுமியே இவ்வாறு யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்திலிருந்து 11ஆம் திகதி காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி காணாமல் போனமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தியை அவதானித்த வர்த்தகர் ஒருவர் சிறுமி பஸ் தரிப்பிடத்தில் இருப்பதை அவதானித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து மீட்கப்பட்ட சிறுமி கலஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு அவர் கண்டி வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் நாளை நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி யாழ்ப்பாணத்திலுள்ள தனது நண்பியைத் தேடிச் சென்றதாகவும் செல்லும் வழியில் தனது அலைபேசி செயலிழந்ததால் நண்பியுடன் தொடர்புகொள்ள முடியாமல் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.