யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 03 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை அடுத்து கடற்கரையில் இருந்த மீன் வாடி மற்றும் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
அதில் வாடிகள் சில எரிந்த நிலையில் மூன்று படகுகள் தீக்கிரையாகியுள்ளது. படகுகள் மற்றும் வாடிகளுக்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து ஊரவர்கள் ஒன்று கூடி தீயினை அனைத்ததுடன் இந்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவித்தனர். மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் தப்பி சென்றுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.