சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய் – இனியபாரதி

0
6

நாடாளுமன்றத்தில் அண்மைக்காலமாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தவை யாவும் அப்பட்டமான பொய்கள். எனவே அவருக்கு முதுகெலும்பு இருந்தால் நேரடியாக இது போன்று செய்தியாளர் சந்திப்பில் வந்து உண்மையை நிரூபித்துக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்துள்ளார்.

சாணக்கியன் எம்.பி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அம்பாறை மாவட்ட ஊடக மையத்தில் நேற்று (06) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தன்னை குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவித்தது அப்பட்டமான பொய். முதுகெலும்பு இருந்தால் நேரடியாக வந்து இவ்வாறு ஊடக மாநாட்டில் அவ் விடயத்தை நிரூபிக்கட்டும்.

நான் அவருக்கு பகிரங்கமாக சவால் விடுகிறேன். சாணக்கியன் எம்.பி நாடாளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்த கருத்தை மறுக்கின்றேன்.

அவருக்கு நாடாளுமன்ற சிறப்பு உரிமை இருக்கிறது என்பதற்காக மற்றவரின் சுய கௌரவத்தை உரிமையை இழுக்கும் உரிமை அவருக்கு இல்லை. பிள்ளையானின் சகா நான் என குறிப்பிட்டு இருக்கிறார்.

எனக்கும் அவருக்கும் இடையே முரண்பாடுகள் தான் அதிகம். இவ்வாறு இருக்க எவ்வாறு என்னை தொடர்புப் படுத்தி பேச முடியும். அது மாத்திரமல்ல நான் கொழும்பு ஹில்டன் ஹோட்டலுக்கு சென்றதாக பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார்.

கடந்த இரண்டு வாரங்களில் நான் கொழும்பு செல்லவே இல்லை. எனது சாரதி சுதா என்று சொல்கின்றார். முடிந்தால் அந்த சுதாவை காட்டுமாறு சவால் விடுகின்றேன்.

எனவே தான் நாடாளுமன்றத்தில் பச்சைப் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்ற அவரின் இந்த சித்து விளையாட்டுகளை இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை வழங்கவுள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமாக இருந்தால் அவர் இவ்வாறான ஊடக மாநாட்டை நடத்தி பகிரங்கமாக நேருக்கு நேர் கூறட்டும் என சவால் விடுகின்றேன் என்றார்.