மன்னார் போராட்டகாரர்களுக்கு எதிராக வழக்கு

0
25

மன்னார் நகரப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு மக்களின் எதிர்ப்பை மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களுக்கு எதிராக மன்னார் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நேற்று (01.10.2025) மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

போராட்டத்தில் பொலிஸ் தாக்குதலில் காயமடைந்த மூன்று போராட்டக்காரர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களுக்கு எதிராக பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். சனிக்கிழமை அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஒவ்வொருவருக்கும் ரூ.5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மேலும் ஐந்து நபர்களுக்கு எதிராகவும் மன்னார் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர். இதில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்கஸ் அடிகளார் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு நபர்கள் அடங்குவர்.

குறித்த நபர்கள் சட்டத்தரணி பா. டெனிஸ்வரன் மூலம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்பட்ட நிலையில் ஐந்து சந்தேக நபர்களையும் தலா ரூ.5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார். வழக்கு விசாரணைகள் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.