இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதல்; ஈரான் கடற்படைத் தளபதி சூளுரை

0
24

இலங்கை கடற்பரப்பில் அமெரிக்காவின் டொர்பிடோ தாக்குதலால் உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் மரணத்திற்கு பழிவாங்கப்படும் என்று ஈரான் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானி சூளுரைத்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் இலங்கை கடற்பரப்பை அண்மித்த பகுதியில் கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் எதிரிகள் கொடிய பதிலடித் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என்று ஈரான் கடற்படைத் தளபதி எச்சரித்துள்ளார்.

“நாங்கள் எமது தியாகிகளின் இரத்தத்திற்குப் பழிவாங்குவோம் எதிரி சற்றும் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து மரண அடி கொடுப்போம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 4ஆம் திகதியன்று இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த ‘IRIS Dena’ என்ற ஈரானியக் கடற்படைக் கப்பல் இலங்கை காலிக்கு அண்மையில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 87 ஈரானிய மாலுமிகள் உயிரிழந்தனர். 32 பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.