புதிய தலைவர் நியமனம்: கருத்து மோதலில் ஈடுபட்ட ஜனாதிபதி, பிரதமர்

0
86

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததாக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என துறைசார் சில தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளன.

முன்னாள் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவின் சில திட்டங்கள் தமக்கு பாதகத்தை ஏற்படுத்தியதாக குறித்த தொழிற் சங்கங்கள், ஜனாதிபதியிடம் கூறியுள்ளன. அதனையடுத்து 14ஆம் திகதி சம்பத் அமரதுங்கவை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளரால் கோரப்பட்டதுடன், 15ஆம் திகதி அவர் இராஜினாமா செய்திருந்தார்.

சம்பத் அமரதுங்க, இராஜினாமா செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தென் கொரியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணத்தில் இலங்கையில் உயர்கல்விக்கு உதவுவதற்காக கொரிய அரசாங்கத்திடமிருந்து மானியத்தைப் பெற்றிருந்தார். இலங்கை திரும்பியதும் பிரதமரைச் சந்தித்த அவர், நாட்டின் உயர்கல்வித் துறைக்கான தனது எதிர்காலப் பார்வையையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இதன் காரணமாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க தமது பதவியில் தொடரலாம் என பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் அவரது கருத்து வெளியான மறுநாளே சம்பத் அமரதுங்கவை பதவி நீங்குமாறு ஜனாதிபதி கோரியதுடன் கடந்த 15ஆம் திகதி அவரது இராஜினாமா கிடைத்ததும் அவருக்கு பதிலாக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்னவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமித்துள்ளார்.

இந்த நியமனத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததாக அரச தரப்பு செய்திகள் மூலம் அறிய முடிந்தது.