புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா; கச்சதீவில் குவிந்த இந்திய – இலங்கை பக்தர்கள்

0
18

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. இவ்வாண்டு நடைபெற்ற திருவிழாவில் சுமார் 13,000 பக்தர்கள் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில் சுமார் 4,000 பக்தர்கள் இந்தியாவிலிருந்தும், ஏறத்தாழ 9,000 பக்தர்கள் இலங்கையிலிருந்தும் வருகை தந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் முதல் முறையாக 13ஆயிரத்து 364 ற்கு மேற்பட்ட பக்தர்களின் பங்குபற்றலுடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (27) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளாரால் ஆலயக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றிருந்ததுடன் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில் பல பங்குத்தந்தையர்களின் பங்குபற்றலுடன் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. தொடர்ந்து இன்றைய தினம் (28) காலை திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில் இலங்கை மற்றும் இந்திய அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.