அவுக்கண புத்தர் சிலைக்கு காவி ஆடை அணிவித்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

0
204

அனுராதபுரத்தில் அவுக்கண புத்தர் சிலைக்கு காவி ஆடையை அணிவித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, தொல்லியல் மதிப்புள்ள சிலையின் தற்போதைய தன்மையை மாற்றுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய அநுராதபுர தொல்பொருள் திணைக்களம், தொல்லியல் உதவிப் பணிப்பாளர் மற்றும் வலய உத்தியோகத்தர் ஆகியோரை புனித தலத்திற்கு அனுப்பி சம்பவம் தொடர்பான தகவல்களைத் திரட்டியுள்ளது.

தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொல்பொருள் நினைவுச்சின்னம் அல்லது சிலையின் தற்போதைய தன்மையை மாற்றுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று திணைக்களம் குறிப்பிடுகிறது.

அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிடுகிறது. அநுராதபுர காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட அவுக்கண புத்தர் சிலை நாட்டில் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. கி.பி.5ம் நூற்றாண்டில் தாதுசேன மன்னன் இந்த சிலையை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது.

இந்நிலையில் சிலையின் மடிப்புகள் தெளிவாகத் தெரிவதாலும் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டிருப்பதாலும் அதன் சமநிலையாலும், இந்நாட்டின் கடந்த காலக் கலையின் தனித்துவத்தைக் காட்டும் வடிவமைப்பாக இது கருதப்படுகிறது.

இன்று தொல்பொருள் மதிப்புடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்களால் வழிபடப்படும் அவுக்கண புத்தர் சிலைக்கு காவி ஆடை அணிவிக்கும் பணியில் ஈடுபடும் ஒரு குழுவினரின் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. சிலர் சிலையின் மேல் ஏறி அந்த காவி ஆடையை அணிவித்த விதமும் காணப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.