அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் பியோரியா என்னும் நகர்ப் பகுதியில் அமைத்துள்ள பியோரியா மாநில மருத்துவமனை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையாகச் செயல்பட்டுக் கொண்டு இருந்தது.

இதனின் முன்னைய பெயர் “இல்லினாய்ஸ்” குணப்படுத்த முடியாத பைத்தியத்திற்கான புகலிடம் (Illinois Asylum for the Incurable Insane). இங்கு மிகவும் மோசமான நிலையிலிருந்த மனநல நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது.
1902 இல் ஜார்ஜ் ஜெல்லர் என்ற மருத்துவர் இந்த மருத்துவமனையின் பணிகளை நிறைவு செய்து திறந்து வைத்துள்ளதோடு இங்கு மனநல நோயாளிகளுக்கென்று மனிதத்துவ மருத்துவம் கிடைக்க வேண்டுமென்று இதனைத் திறந்ததாகக் கூறப்படுகிறது.
முதற்கட்டத்தில் 33 கட்டடங்களுடன் தொடங்கி 63 கட்டிடங்கள் வரை அனைத்து வசதிகளுடன் கொண்டு வரப்பட்டன. அதில் தற்போது வெறும் 12 கட்டிடங்கள் மட்டும் உள்ளது. 1950களில் சுமார் 2800 மனநல நோயாளிகள் இங்குச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். 1973 இல் போதுமான நிதியுதவி, செவிலியர்கள் உதவி இல்லாததால் மூடப்படவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

அங்கு பிரபலமாகச் சொல்லப்படும் ‘கல்லறை எல்ம்’, ‘ஓல்ட் புக்’ என்று அழைக்கப்படும் நபரின் உருவத்தை அவர் இறந்த பிறகும் அந்த மனநல மருத்துவமனையில் கண்டுள்ளனர்.
மேலும் 1920களில் மருத்துவர் ஜார்ஜ் எழுதிய புத்தகத்தில் மருத்துவமனையில் நடந்த பல அமானுஷ்ய சம்பவங்கள் பற்றி எழுதியுள்ளார். மேலும் ‘ஓல்ட் புக்’ பற்றிய அவரின் அனுபவத்தையும் அதில் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் அங்கு நிகழ்ந்த சம்பவம் பெரிதளவில் கவனிக்கப்பட்டு ‘கோஸ்ட் ஹன்டர்ஸ்’ என்ற தொலைக்காட்சியில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த மருத்துவமனை தற்போது பொதுமக்களுக்கு அமானுஷ்ய நடவடிக்கை விசாரணைக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த மாதம் ஒருமுறை திறந்துவிடப்பட்ட நிலையில் மேலும் ஆகஸ்ட் 6 மற்றும் 20 தேதிகளில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 50 டாலர் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மருத்துவமனை கட்டிடம், கல்லறை போன்றவற்றைப் பார்க்கலாம். மேலும் பியோரியா மாநில மருத்துவமனை அருங்காட்சியகத்தில் மருத்துவமனையில் உபயோகத்திலிருந்த பொருட்கள், நோயாளிகளின் குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.