நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவருக்கு இலங்கையில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

0
298

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் முருகன் என்ற மீனவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 14 மற்றும் 28 ஆம் திகதிகளில் யாழ்.நெடுந்தீவு பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக 22 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததுடன் அவர்களது படகுகளையும் கைப்பற்றினர். கைதான மீனவர்கள் இன்று ஊர்காவல் துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன் 21 மீனவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டதுடன் ஒருவருக்கு மாத்திரம் இரு ஆண்டுகள் சிறை தண்டனை பிறப்பித்தும் உத்தரவிட்டார்.

இரண்டாவது முறையாக எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்து முருகன் என்ற மீனவருக்கே இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.