இஸ்ரேல் – ஈரான் மோதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் ராணுவ வலிமை குறித்து வியக்கத்தக்க கருத்துகளை பகிர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஈரான் ஒரு மிகப்பெரிய வல்லரசு என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் அவர்கள் வளைகுடா நாடுகள் மீது இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்துவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் இந்த அதிரடியான பதிலடி தாக்குதல் தங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பணியாமல், ஈரான் சரணடைவதற்கு பதிலாக திருப்பி தாக்கியிருப்பது அவர்களின் மிகப்பெரிய வலிமையை காட்டுகிறது என்று டிரம்ப் பாராட்டும் தொனியில் பேசியிருப்பது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஈரானின் இந்த தாக்குதல் வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில் அமெரிக்கா அடுத்த கட்டமாக எத்தகைய ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரானின் வியூகங்களை முன்கூட்டியே கணிக்க தவறியதை ஒப்புக் கொள்ளும் வகையில் டிரம்பின் இந்த கருத்து அமைந்துள்ளது.



