நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரகந்த ஸ்பெசிபன் தோட்டத்தில் ஏற்பட்ட மினிசூறாவளி காரணமாக 14 வீடுகள் சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (15.04.2023) பதிவாகியுள்ளது.
சேதமடைந்த குடியிருப்பின் கூரை தகரங்கள் காற்றினால் அல்லூண்டு எறியப்பட்டதன் காரணமாக இருவருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின் தடை
இதற்கமைய குறித்த பகுதிக்கு இரண்டு மணித்தியாலங்கள் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அக்கரகந்த ஸ்பெசிபன் தோட்டத்தில் ஏற்பட்ட மினிசூறாவளி காரணமாக 74 பேர் தோட்டத்தில் உள்ள சிறுவர் பாராமறிப்பு நிலையத்திலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேதம்
இவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மற்றும் கிராம சேவகர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மினிசூறாவளி மழையில்லாத போது திடீரென ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பாக லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
