வசந்த முதலிகே இலங்கை மக்களுக்கு எழுதிய கடிதம்…

0
350

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே இலங்கை மக்களுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

வாழ்வுரிமையை உறுதி செய்ய அரகலய (போராட்டத்தை) தேர்வு செய்ய வேண்டும் என்றும், இதை அடைவதற்கு மாணவர் இயக்கம் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள்

உண்மையான பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் வேளையில், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் சிறையில் வாடுகின்றனர் என வசந்த முதலிகே தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வசந்த முதலிகே இலங்கை மக்களுக்கு எழுதிய பகிரங்கக் கடிதம் | Open Letter Written Wasantha Mudalige People Sl

சமுதாய நலனுக்காகவும், நாட்டில் பொருளாதார, அரசியல் மாற்றத்திற்காகவும் போராடிய நிலையில் ஜனவரி 1ஆம் திகதியுடன் 135வது நாள் சிறைவாசத்தை தாம் கழித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதே கோரிக்கைக்காக போராடியவர்கள் இன்னும் பலர் சிறையில் வாடுகிறார்கள்.

மக்கள் போராட்டம் 

நெருக்கடியின் காரணமாக நடுத்தர மக்களின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில் இந்த நிலைமை சமூகத்தில் ஒரு நடுத்தர வர்க்கத்தை முற்றாக அழித்துவிடும் என்றும் வசந்த முதலிகே கூறியுள்ளார். மக்கள் போராட்டத்தின் அபிலாஷைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறும் வசந்த முதலிகே, ரணில் ராஜபக்ச, முன்பை போன்றே தொடர்ந்தும் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வசந்த முதலிகே இலங்கை மக்களுக்கு எழுதிய பகிரங்கக் கடிதம் | Open Letter Written Wasantha Mudalige People Sl

தமது தோல்விகளையும், அயோக்கியத்தனத்தையும் மூடிமறைக்கும் நோக்கில் அரசாங்கம் மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் நோக்கில் பாரிய அவதூறு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. அரசாங்கம் இத்தகைய அவதூறு பிரசாரங்களை முன்னெடுத்தாலும் அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என வசந்த முதலிகே கோரிக்கை விடுத்துள்ளார்.

இது அரகலய போராட்டத்;தின் ஆரம்பம் மட்டுமே எனவும் மக்களின் போராட்டம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது எனவும் வசந்த முதலிகே தனது பகிரங்க கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.