பிரிட்டனில் தக்காளி பற்றாக்குறை அதிகரித்துவரும் நிலையில், தற்போது அங்குள்ள மக்களின் மிக விருப்பமான உணவுகளில் ஒன்று இனி பல நாட்களுக்கு பரிமாறப்படாமல் போகலாம் என கவலை எழுந்துள்ளது.
பிரிட்டனில் தக்காளி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பீட்சா உணவுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தக்காளி விலை விண்ணைமுட்டும் அளவுக்கு 400% அதிகரித்துள்ளது. 5 பவுண்டுகளில் இருந்து தற்போது 20 பவுண்டுகள் என்ற நிலை வந்துள்ளது.
இதனால், சமையற்கலைஞர்கள் தக்காளி இல்லாமல் புதுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். தக்காளி பயன்படுத்தும் உணவு வகைகளுக்கு, தக்காளிக்கு மாற்றாக ricotta, courgettes அல்லது aubergines உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தலாம் என பிரிட்டனில் உள்ள இத்தாலிய சமையற்கலைஞர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தக்காளி பற்றாக்குறை என்பது சமீப நாட்களில் முடிவுக்கு வருவதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், அரசாங்கம் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
தக்காளி மட்டுமின்றி, குறிப்பிட்ட சில காய்கறிகள் மற்றும் பழங்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. Asda, Tesco, Aldi மற்றும் Morrisons போன்ற பல்பொருள் அங்காடிகள் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.