ராஜபக்ஷக்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் ரணில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டை அழித்த ராஜபக்சர்கள் மக்களின் வாழ்வை முற்றிலுமாக சீரழித்து விட்டனர் எனவும் நன்றாக வாழ்ந்தமக்களின் அன்றாட வருமானம் சரிந்தாலும் அந்நிலையை உருவாக்கிய ராஜபக்சர்களை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்து வருவதாகவும் அவர் கூறினார்.
யானை – காகம் – மொட்டு கூட்டு
அதோடு யானை – காகம் – மொட்டு பொதுக் கூட்டுமக்கள் வாழ்வை அழித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மின் கட்டணம், எரிபொருள் விலை, எரிவாயு விலை, வரி அதிகரிப்பு போன்றவற்றை அதிகரித்து ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் சுருக்கி அதலபாதாளத்தில் தள்ளவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் பணப்பையை காலி செய்து மக்களின் கனவுகளை அழித்த இந்த அரசாங்கம் ராஜபக்சர்களின் சொர்க்கமாக மாறியுள்ளதாகவும் ராஜபக்சர்களின் திருட்டுக்களைப் பாதுகாக்கும் கைபொம்பையாக மாறியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளை நாட்டை கட்டியெழுப்புவதற்கு அடுத்த தேர்தல் வெற்றியுடன் ஐக்கிய மக்கள் சக்தி செயற்படத் தொடங்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வீழ்ந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டுமானால் ஒரு பாரிய தேசிய புரட்சி எழ வேண்டும் எனவும் அதற்கு இந்நாட்டில் காலாவதியான கல்வி முறை மாற்றப்பட்டு சர்வதேச சந்தைக்கு ஏற்ற நவீனதொழில்நுட்பத்துடன் நவீன திறன்களை உருவாக்கும் ஆங்கில மொழியறிவுக்கு முன்னுரிமை வழங்கும் கல்விமுறை உருவாக்கப்பட வேண்டும் எனவும் சஜித் குறிப்பிட்டார்.