மஹிந்த ராஜபக்சவை காட்சிப்படுத்திக்கொண்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் முன்னெடுக்கப்படும் ‘ஒன்றாக மீண்டெழுவோம்’ எனும் வேலைத்திட்டத்தை நான் கடுமையாக எதிர்க்கின்றேன் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் களுத்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் நடைபெற்ற நாளில் நான் வெளிநாடு சென்றிருந்தேன்.
அதில் பங்கேற்கவில்லை. கடைசியாக ஆராச்சிகட்டுவையில் நடைபெற்ற கூட்டத்துக்கு சென்றிருந்தேன், அங்கு கூட்டத்தில் உரையாற்றுகின்றீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த என்னிடம் வினவினார்.
‘மீண்டெழுவோம்’ வேலைத்திட்டம்
அதற்கு நான் உடன்படவில்லை. ‘மீண்டெழுவோம்’ வேலைத்திட்டத்துக்கு நான் எதிர்ப்பு என வெளிப்படையாக கூறினேன். ஏனெனில் மஹிந்த ராஜபக்சவால்தான் நாம் சுதந்திரமாக நடமாடுகின்றோம்.
எனவே, அரசியலில் இருந்து அவரை கௌரவமாக விடைபெறுவதற்கு இடமளித்திருக்க வேண்டும் என கூறிய அவர், அதை நாம் செய்யவில்லை. எதற்காக மீண்டும் அவரை கொண்டுவர வேண்டும் என்பதே எனது வாதம்.
நாமல் ராஜபக்சவிடமும் நான் இதையே குறிப்பிட்டேன். அதேவேளை, நாட்டை பொறுப்பேற்காமல் தலைவர்கள் பின்வாங்கினார்கள் , ரணில் விக்கிரமசிங்க துணிவுடன் ஏற்றார் என்றும் எனவே, அவரின் காலை வாருவதற்கு நாம் தயாரில்லை என்றும் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.