கடந்த 2 மாதத்திற்குள் யாழில் 508 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரால் மாத்திரம் முடியாது எனவும், அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் நடமாடும் சேவை ஆரம்பம்
கடந்த யுத்த காலத்தில் இருந்து யாழ். மாவட்டத்தில் இழப்பீடுகள், காயமடைந்தவர்களுக்கான ஆவணங்கள் பெறுவதில் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாகவும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மீளவும் வருகை தந்துள்ள மக்கள் தமது ஆவணங்களை இலகுபடுத்தும் முறையிலான நடமாடும் சேவை இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியது.
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் இந்த நடமாடும் சேவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தற்போது வடக்கில் ஒரு புதிய பிரச்சினை உருவாகி வருகிறது. இலங்கை முழுவதும் இந்த போதைப்பொருள் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. ஆனால் வடபகுதியில் அது மிகவும் அதிகளவில் காணப்படுகிறது.
கடந்த 2 மாதத்திற்குள் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எதிர்கால இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் செயற்பாடு தொடர்பில் ஒரு பொறுப்பாக செயற்பட வேண்டியுள்ளது. அந்த விடயத்தை தடுப்பதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டியதாக உள்ளது.
போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இருந்த போதைப்பொருள் பாவனை மிக அதிக அளவில் காணப்படுகின்றது. கடந்த ஒரு சில மாதங்களாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் போதைப்பொருட்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இது ஏனைய இடங்களோடு ஒப்பிடும் போது அதிகளவாக காணப்படுகின்றது. இது ஒரு விபரீதமான ஒரு செயல்பாடாக காணப்படுகின்றது. சிறுவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் பாரதூரமான செயற்பாடாக காணப்படுகிறது அத்தோடு இந்த விடயம் போதைப்பொருள் வியாபாரிகளால் உருவாக்கப்படுகிற செயற்பாடாக காணப்படுகின்றது.

அதாவது குறிப்பாக யாழ். மாவட்டம் மிகவும் ஒரு பாதிப்பான நிலையில் காணப்படுகின்றது. இந்த நாட்டின் பிரஜை என்ற ரீதியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக நாங்கள் உடனடியாக ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக முப்படையினர், பொலிஸார் அனைவரையும் இணைத்து இதனை தடுப்பதற்கான நடவடிக்கையை உடனே எடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன். இந்த போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு உரிய செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்முன்னெடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.