இலங்கையில் விகாரை ஒன்றில் கசிப்பு போத்தல் ஒன்று ஏலம் விடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ மற்றும் மடத்துகம பகுதியிலுள்ள விகாரை ஒன்றிலேயே அண்மையில் நடைபெற்ற சந்தை மற்றும் பாடல் கச்சேரியில் இரண்டு பியர் போத்தல்களும் ஒரு போத்தல் கசிப்பும் ஏலத்திற்கு விடப்பட்டன.
துறவி மற்றும் இளம் அமைப்பாளர்கள்
விகாரை அமைந்துள்ள நகரின் பிரதான பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணிபுரியும் துறவி மற்றும் இளம் அமைப்பாளர்கள் அடங்கிய குழுவினர் இணைந்து இந்த ஏலத்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு மதுப்போத்தல்களை ஏலத்தில் விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த மதுப்போத்தல்களை கைப்பற்ற பலரும் போட்டா போட்டியில் விலையை அதிகரித்துக் கொண்டிருந்தனர்.
இதன்போது, நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட விருந்தினராக வந்திருந்த இளம் பொலிஸ் அதிகாரி ஒருவர் மதுபோத்தல்களை விற்பனையில் இருந்து அகற்றுமாறு கோரியபோதும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை.
கிராமவாசிகள் அதிருப்தி
இதனையடுத்து மதுபான போத்தலை ஏலத்தில் வைத்து பெறப்படும் பணத்தை விட விகாரைக்கும் சமயத்துக்கும் அபகீர்த்தி ஏற்படும் என இளம் பொலிஸ் உத்தியோகத்தர் ஆலய பிக்குகளிடம் சுட்டிக்காட்டியதையடுத்து மது போத்தல் ஏலத்திலிருந்து அகற்றப்பட்டது.
மதுப்போத்தல்களை ஏலத்திற்கு வைத்த பிக்குகளின் நடவடிக்கை குறித்து கிராம மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இந்த மதுபான போத்தல்களை விற்பனை செய்யாததால் சுமார் ஒரு இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.