உலகளாவிய ரீதியிலான பேச்சுப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்று வெற்றிச் சான்றிதழினை சுவீகரித்த கமு/சது/ அரபா வித்தியாலய பழைய மாணவி ஜலீல் பாத்திமா மின்ஹாவுக்கு சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கமு/ சது/அரபா வித்தியாலய அதிபர் எம்.எச். நூருள் ஹிமாயா தலைமையில் இடம்பெற்ற பாராட்டு விழாவிலேயே குறித்த மாணவி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
ஸ்கொட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவம் நடத்திய 06 – 10 வயதினருக்கிடையிலான மாணவர்கள் இந்தியா, மலேசியா, கனடா, இலங்கை, அமெரிக்கா, ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து, கட்டார், மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, இன்னும் பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற “கல்வி கண் போன்றது” எனும் தலைப்பில் இடம்பெற்ற உலகளாவிய பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட ஜலீல் பாத்திமா மின்ஹா சர்வதேச ரீதியில் மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர், கௌரவ அதிதிகளாக வலயக் கல்விப் பணிமனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். ஹைதர் அலி மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ. எல்.அப்துல் மஜீத், விஷேட அதிதியாக சம்மாந்துறை கோட்டக் கல்வி அதிகாரி- எம்.ஏ. சபூர் தம்பி இன்னும் பல கல்வி அதிகாரிகளும் பாடசாலை கல்விச் சமூகமும் கலந்து கொண்டனர்.
ஏனைய விருதுகள்
மேலும், மின்மினி மின்ஹாவுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி “சர்வதேச பறவை” எனும் விருதும் வழங்கி கௌரவித்திருந்தனர்.
அதேவேளை, இம் மாணவி இதற்கு முன்னர் தமிழ்நாட்டு இலக்கிய கழகம் வழங்கிய இந்திய முன்னாள் அதிபர் அப்துல் கலாம் கனவுக் கண்ணி விருது, தமிழ் நாட்டு அரசின் இளமாமணி காந்தி விருது மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கிய சிறந்த மாணவர் விருது போன்றவைகளையும் சுவீகரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.