சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நபர் ஒருவரிடம் இருந்து 5 சிறிய வகை மலைப்பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பாங்காக்கில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் சோதனை செய்தனர்.
குறித்த நபரின் உடமைகளை சோதனையிட்டனர். அவர் கொண்டு வந்த பெட்டி ஒன்றில் சோதனையிட்ட போது அதில் ஐந்து சிறிய வகை மலைப்பாம்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் சட்டவிரோதமாக ஊர்வனவற்றை எடுத்துச் சென்றதாக அந்த பயணியை கைது செய்ததாக சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே.ஆர்.உதய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பயணி மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.