ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிலிருந்து திருடப்பட்டதாக கருதப்படும் புத்தகங்கள், புத்தர் சிலை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் ஜனாபதி செயலர் சி.ஐ.டி.க்கு அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு – 3, 5 ஆம் ஒழுங்கை, இலக்கம் 119 இல் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது கடந்த ஜூலை 9 ஆம் திகதி தீ வைத்து அவரது கார் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.
ஜனாதிபதி செயலகத்தின் பொது தொலைபேசி இலக்கத்துக்கு அண்மையில் வந்த அழைப்பொன்றில் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டின் மீது தீ வைக்கப்பட்ட போது திருடப்பட்ட புத்தகங்களும், புத்தர் சிலை ஒன்றும் பாதுகாப்பாக தன்னிடம் இருப்பதாக நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை உடன் வைத்திருக்க பயமாக இருப்பதால் அதனை கையளிக்க வேண்டும் எனவும் அதற்காக ஜனாதிபதியின் செயலரை தொடர்பு கொள்ள இணைப்பை ஏற்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி செயலக அதிகாரிகள் விடயத்தை ஜனாதிபதி செயலரின் கவனத்துக்கு கொண்டு வந்த பின்னர் அவர் அதனை சி.ஐ.டி. க்கு அறிவித்துள்ளார்.
இந் நிலையிலேயே அது குறித்து அவதானம் செலுத்தி சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது.