இந்திய ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா நகரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அங்கிதா குமாரி. இவர் பிளஸ் 2 படித்து வந்தார்.
இதனிடையே, அங்கிதா குமாரி வசித்து வரும் அதேபகுதியில் முகமது ஷாருக் ஹசன் என்ற இளைஞர் தன்னை காதலிக்குமாறு அங்கிதாவை பல நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார்.
அங்கிதா சிறுவயதில் இருந்தபோதே அவரது தாயார் உயிரிழந்துவிட்டதையடுத்து ஷாருக் தனக்கு தொல்லை கொடுத்து வருவதாக கடந்த 22ஆம் திகதி இரவு அங்கிதா தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஷாருக்கின் குடும்பத்திடம் நாளை பேசுவோம் என அங்கிதாவின் தந்தை கூறியுள்ளார்.
அன்று இரவு அங்கிதா தனது வீட்டில் உள்ள தனது அறையில் உறங்கியுள்ளார். அப்போது, நள்ளிரவு அங்கிதாவின் வீட்டிற்குள் நுழைந்த ஷாருக் ஜன்னல் வழியாக அங்கிதா உறங்கிக் கொண்டிருந்த படுக்கை மீது பெற்றோலை ஊற்றி தீவைத்துள்ளார்.
தீ அங்கிதா மீதும் பிடித்துள்ள நிலையில் உறங்கிக்கொண்டிருந்த அங்கிதா தன் உடல் தீயில் எரிவதை உணர்ந்து விழித்து அலறியுள்ளார். தனது மகளின் அலறல் சத்தம் கேட்ட அங்கிதாவின் தந்தை அறைக்கு ஓடி வந்து பார்த்துள்ளார்.
அங்கு அங்கிதா தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், உடலில் போர்வையை கொண்டு அணைத்துள்ளார். படுகாயமடைந்த அங்கிதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

45 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அங்கிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடுமையான தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அங்கிதா நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அங்கிதாவை பெற்றோல் ஊற்றி தீவைத்த ஷாருக் ஹசன்
தனது மரண வாக்குமூலத்தில், காதலிக்க மறுத்ததால் ஷாருக் ஹசன் தன் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்ததாக அங்கிதா தெரிவித்துள்ளார். காதலிக்க மறுத்ததால் சிறுமியை பெற்றோல் ஊற்றி எரித்துக் கொன்ற ஷாருக் ஹசனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவரது நண்பனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த அங்கிதாவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
அங்கிதாவை பெற்றோல் ஊற்றி தீவைத்த ஷாருக் ஹசன் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் அழைத்து செல்லும்போது அவர் சிரித்துக்கொண்டே நடந்து செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் இந்து – இஸ்லாமிய மத ரீதியிலான மோதலை ஏற்படுத்த வழிவகுத்துள்ளதால் தும்கா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
