இந்தியாவுக்கு வந்த கனேடிய குடிமகள் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரது மரணத்துக்குக் காரணமானவர் கனடாவில் சுதந்திரமாக உலவி வருகிறார்.
சொத்துத்தகராறில் சாமாதானம் பேசச் சென்ற கனேடிய பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், அவரது மகன் 19 ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கிறார்.
இந்தியரான ஆஷா கோயல் 1963ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்தார். ஒன்ராறியோவிலுள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் தலைமை தாய் சேய் நல மருத்துவராக பணியாற்றிவந்தார் அவர்.
2003ஆம் ஆண்டு குடும்பத்தில் நடந்த ஒரு திருமணத்துக்காக மும்பை சென்றிருந்தார் ஆஷா. அப்போது ஆஷாவுக்கும் அவரது சகோதரர்களுக்குமிடையே குடும்பச் சொத்து தொடர்பில் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
பின்னர் சமாதானம் பேசுவதற்காக தனது சகோதரரான சுரேஷ் அகர்வால் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் ஆஷா. மறு நாள் காலை, தலையில் கல்லாலடிக்கப்பட்டும், காய்கறி வெட்டும் கத்தியால் குத்தப்பட்டும் கொல்லப்பட்டுக் கிடந்திருக்கிறார் அவர். கனடாவில் வாழ்ந்துவந்த ஆஷாவின் மகனான சஞ்சய் கோயல், தாய் கொல்லப்பட்ட தகவல் கிடைத்து, பதறிப்போய் இந்தியாவுக்கு ஓடியிருக்கிறார்.
2005ஆம் ஆண்டு, மும்பை பொலிசார் ஆஷா கொலை வழக்கு தொடர்பாக நான்கு பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார்கள். அவர்களில் மூன்று பேர் ஆஷாவின் சகோதரரான சுரேஷ் அகர்வாலிடன் பணியாற்றிய ஊழியர்கள், ஒருவர் அவரது மருமகன்.
ஆஷாவின் சகோதரர்களான சுரேஷ் மற்றும் சுபாஷ் அகர்வால் ஆகியோர்தான் பணம் கொடுத்து ஆஷாவைக் கொல்லச் சொன்னதாக அவர்கள் சாட்சியமளித்தார்கள். இதற்கிடையில், சுபாஷ் கனேடிய குடிமகனாகிவிட்டார். 2006ஆம் ஆண்டு இண்டர்போல் சுபாஷைக் கைது செய்ய சிவப்பு நோட்டீஸ் அளித்துள்ளது.
Courtesy Goel family
ஆனால், தன் தாயின் மரணத்துக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று நம்பிய சஞ்சய்க்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது, இன்றுவரை…
சஞ்சய் இந்தியாவிலிருந்து பெருந்தொகை செலவு செய்து ஆவணங்களை தயார் செய்தும், சுபாஷ் இன்னமும் சுதந்திரமாக ரொரன்றோவில் உலவிக்கொண்டிருக்கிறார்.
Courtesy Goel family
ஒருவேளை தாங்கள் இந்தியப் பின்னணி கொண்டவர்கள் என்பதால் தங்களுக்கு உதவ கனேடிய பொலிசார் மறுக்கிறார்களோ என சந்தேகிக்கிறார் சஞ்சய்.
தற்போது புதிதாக ஒரு அரசு வழக்கறிஞர் இந்த வழக்குக்காக இந்தியாவில் நியமிக்கப்பட்டுள்ளதால் சஞ்சய் குடும்பத்தினருக்கு சற்று நம்பிக்கை உருவானாலும் தன் மாமாவான சுபாஷ் கனடாவில் சுதந்திரமாக உலவிக்கொண்டிருக்கும் வரை தங்களுக்கு நீதி கிடைக்காது என்கிறார் சஞ்சய்.