பிரிட்டனில் ரோலர் கோஸ்டர் ஒன்று திடீரென அந்தரத்தில் நின்றதால் அதில் பயணித்த மக்கள் வேறு வழியின்றி கம்பிகளை பிடித்து நடந்தே கீழே இறங்கியிருக்கிறார்கள்.
இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது. பொதுவாகவே ரோலர் கோஸ்டரில் பயணிப்பது என்பது பலருக்கும் பிடித்திருக்கும்.
சாகச பிரியர்களுக்கு விருப்பமான இந்த பயணம் எப்போதும் நாம் நினைத்தபடியே அமைவதில்லை. ரோலர் கோஸ்டரில் பயணிப்பவர்கள் சந்திக்கும் முதல் சிக்கலே அதன் அதீத உயரம் தான்.
![அந்தரத்தில் நின்ற ரோலர் கோஸ்டர்; ஷாக் கொடுத்த அதிகாரிகள்! | A Roller Coaster That Stood In The Distance அந்தரத்தில் நின்ற ரோலர் கோஸ்டர்; ஷாக் கொடுத்த அதிகாரிகள்! | A Roller Coaster That Stood In The Distance](https://cdn.ibcstack.com/article/3cea5cee-3b5b-493c-899b-edeb49a361c3/22-62d8ee78cb771.webp)
வளைந்து நெளிந்து ஆகாயத்தை தொட்டு பயணிக்கும் இந்த ரோலர் கோஸ்டர் அந்தரத்தில் நின்றுவிட்டால் எப்படி இருக்கும்! அதுவும் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் என்றால் உண்மையாகவே அப்படி இங்கிலாந்தில் நடந்திருக்கிறது. இங்கிலாந்து வரலாறு காணாத வெப்பநிலையை எதிர்கொண்டு வருகிறது.
இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை தொட்டுள்ளது. ஜூலை நடுப்பகுதியில் லண்டனில் வெப்பநிலை பொதுவாக 21 டிகிரி செல்சியஸ் (70 F) இருக்கும். ஆனால் இந்த கோடையில் வெப்பநிலை 38C வரை உயரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ஸ்டாஃபோர்ட்ஷையரின் ஆல்டன் டவர்ஸ் தீம் பார்க்கிற்கு நேற்று சென்றவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். இந்த தீம் பார்க்கில் உள்ள ரோலர் கோஸ்டரில் மக்கள் பயணித்திருக்கின்றனர். ஜாலியாக துவங்கிய அந்த பயணம் கொஞ்ச நேரத்திலேயே ஸ்டாப் ஆகியிருக்கிறது.
![அந்தரத்தில் நின்ற ரோலர் கோஸ்டர்; ஷாக் கொடுத்த அதிகாரிகள்! | A Roller Coaster That Stood In The Distance அந்தரத்தில் நின்ற ரோலர் கோஸ்டர்; ஷாக் கொடுத்த அதிகாரிகள்! | A Roller Coaster That Stood In The Distance](https://cdn.ibcstack.com/article/e9bbe803-1fe1-41f4-b9b5-658e20d47a56/22-62d8ee7905544.webp)
இயந்திர கோளாறு காரணமாக ரோலர் கோஸ்டர் அந்தரத்திலேயே நின்றிருக்கிறது. இதனையடுத்து, களத்தில் இறங்கிய அதிகாரிகள் இப்போதைக்கு சிக்கலை சரி செய்ய வாய்ப்பில்லை என தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் ரோலர் கோஸ்டரில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். வெயிலும் கடுமையாக இருந்ததால் உடனடியாக மக்களை கீழே இறக்க வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் தள்ளப்பட்டனர். ஆகவே நடந்தே கீழே வரும்படி மக்களை வலியுறுத்தியிருக்கின்றனர் அதிகாரிகள்.
வெப்பத்தினால் அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் வெப்ப தடுப்பு கவசங்கள் ஆகியவை அளிக்கப்பட்டிருக்கின்றன.
இதனை தொடர்ந்து 65 அடி உயரத்தில் இருந்து மக்கள் பத்திரமாக கீழே இறங்கியிருக்கிறார்கள். இதனை டீன் என்பவர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.