உலக சந்தையில் எரிபொருளின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் அரசாங்கம் முன்வைத்துள்ள விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை நாளொன்றுக்கு முன்னர் நூற்று நாற்பத்தைந்து டொலர்களாக இருந்த நிலையில் இன்று அதன் விலை 104 டொலர்களாக குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர் இதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்து வரிகளையும் வசூலித்ததன் பின்னர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலையை தற்போதுள்ள விலையில் இருந்து 110 ரூபாவால் குறைக்க முடியும் எனவும் 95 லீற்றர் பெற்றோல் 120 ரூபா அல்லது அதற்கும் குறைவாக வழங்கப்படலாம் என தெரிவித்த அவர் ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 120 ரூபாவினாலும் குறைக்கப்படலாம் என அவர் கூறினார்.
மேலும் இந்த குறைப்புக்கள் எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு எவ்வித நட்டத்தையும் ஏற்படுத்தாது எனவும் ஆனந்த பாலித தெரிவித்தார்.