நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு கண்டனம் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி வான் சாரதிகள் சங்கம், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம், உழவு இயந்திர சாரதிகள் சங்கம், மீனவர் சங்கம், வர்த்தக சங்கம் என்பன இணைந்து ஓட்டமாவடி வான் சாரதிகள் சங்க தலைவர் கே.பி.எம்.சாஜகான் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை முன் நிறுத்தி ஓட்டமாவடி பசார் பள்ளிவாசல் முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதி வழியாக ஓட்டமாவடி பிரதேச சபை வரை சென்று அங்கிருந்து மீண்டும் ஓட்டமாவடி பசார் பள்ளிவாசல் வரை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், சாரதிகள் தங்கள் வாகனத்திற்கு எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாத நிலையிலும், தொழிலை மேற்கொள்ள முடியாமல் உள்ள நிலையிலும், றம்புக்கண பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரியும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஹோ கோம் கோட்டா, சாட்டை எடுத்து நாட்டை திருத்தும் இளம் தலைமுறைதனையை நீ வழிநடத்து தீமைக்கெதிராய் நானும் வருவேன் தனி ஒருவனாய் உன்முன் படையெடுத்து, குட்டப்பட்ட கூட்டம் குனிந்த தலை போதும் பொறுமை விழும் போது சீறும் சிறுத்தையாகும், போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணமும், அரசாங்கத்தினை சித்தரிக்கும் வகையிலான பதாதைகளுடனும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தினை உடனடியாக விலகக் கோரிய கோசங்களும் எழுப்பியவாறு கலந்து கொண்டனர். இலங்கை தேசம் நான்கு பக்கத்திலும் நாசமாய்ப் போய் கிடக்கின்றது இந்த ஆட்சியாளர்களுக்கு இந்த அரசை கொண்டு நடத்த திராணியற்று போயுள்ள காரணத்தினால் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும, மக்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து ஒரு சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்ப இடமளிக்க வேண்டும் எனவும், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகி புதிய அரசாங்கத்தினை உருவாக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்தில் வாழைச்சேனை காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.