அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வரையறுக்கப்பட்ட அமைச்சரவையை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
தான் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய செயற்பட்டு வருவதாகவும் அதற்கு வெளியில் நடவடிக்கைகள் எதனையும் எடுக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேவேளை நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
தமக்கு அமைச்சு பதவிகள் தேவையில்லை எனவும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சர்களாக நியமித்து அமைச்சரவையின் பணிகளை முன்னெடுக்குமாறும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் இதன் போது கூறியுள்ளனர்.
இதனடிப்படையில் 15 அமைச்சர்களை மாத்திரம் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய அமைச்சரவை இன்று அல்லது நாளை பதவியேற்கலாம் என தெரியவருகிறது.
சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட மாட்டார்கள் என தெரியவருகிறது.
மேலும் காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட்டார்கள் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.