ஈரான் பாடசாலை மாணவிகள் உயிரிழப்பு விவகாரம்; ட்ரம்ப் மீது செனட் தலைவர் குற்றச்சாட்டு

0
29

ஈரானியப் பாடசாலை மாணவிகள் 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொய் கூறுவதாக அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதியன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரைத் தொடங்கிய அன்று மினாப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது.

அமெரிக்கத் தயாரிப்பான ‘டொமஹாக்’ ஏவுகணையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் விசாரித்து வரும் நிலையில், எவ்வித ஆதாரமுமின்றி ஈரானே தனது நாட்டுப் பாடசாலையின் மீது தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் கூறி வருகிறார்.

170 பேரை பலிகொண்ட அந்தப் பாடசாலை மீதான தாக்குதலுக்கு ஈரானிய ஏவுகணைகளே காரணம் என ட்ரம்பின் நிர்வாகத்தில் உள்ள வேறு எந்தத் தலைவரும் குறிப்பாக பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உட்பட எவரும் கூறவில்லை” என்றும் சக் ஷுமர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரானியப் போர் தொடங்கிய பிறகு நடைபெற்ற மிக மோசமான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்த சம்பவத்தை வைத்து அமெரிக்காவிற்குள் அரசியல் ரீதியான மோதல்கள் வலுவடைந்துள்ளன.