பிரான்ஸில் ‘பகுட்’ தயாரிப்பு போட்டி; புலம்பெயர்ந்த இலங்கையர் ஜெகதீபன் முதல் இடம்

0
29

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற “Grand Prix de la Baguette de Tradition Française” போட்டியில், இலங்கையைச் சேர்ந்த சிற்றம்பலப்பிள்ளை ஜெகதீபன் முதலிடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

43 வயதான அவர், தனது முதலாவது போட்டியிலேயே 142 போட்டியாளர்களைத் தோற்கடித்து இந்த வெற்றியை ஈட்டியுள்ளார். பாரிஸில் அமைந்துள்ள இவரது “Fouil Didot” உணவகத்திற்கு இந்த வெற்றிக்காக 4,000 யூரோக்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஒரு வருடத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான எலிசி அரண்மனைக்கு (Elysée Palace) ‘பகுட்’ பாண்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த ஒருவராக ஜெகதீபன் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டி ஏராளமான வாடிக்கையாளர்கள் அவரது உணவகத்தின் முன் திரண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னர், கடந்த 2023ஆம் ஆண்டில் இலங்கையில் பிறந்த தர்ஷன் செல்வராஜா என்பவர் பாரிஸின் சிறந்த ‘பகுட்’ தயாரிப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டு இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.