சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விவகாரம்; புதிய குழு உறுப்பினர் உபாலி பன்னிலகே நியமனம்

0
27

முறையான பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினராக அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே நியமிக்கப்பட்டுள்ளார். நிலையியற் கட்டளை 106 இன் விதிகளுக்கு அமைவாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று (18) நாடாளுமன்றுக்கு அறிவித்தார்.

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கவும் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அநுர கருணாதிலக விலகியதையடுத்து வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

குறித்த வெற்றிடத்திற்கு கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இந்த குழு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.