யாழ்ப்பாணம் தையிட்டி போராட்டத்தில் வேலன் சுவாமிகள் தாக்கப்பட்டதையும் கைது செய்யப்பட்டதையும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “தமிழர்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுவதையும், தமிழர் தாயக பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்தமயமாக்கப்படுதலையும் இந்நாட்டு பிரஜைகளுக்கும், சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்துவதற்கும்.
நமது எதிர்ப்பை காட்டுவதற்கும் தமிழர்கள் சாத்வீக வழியில் போராட்டங்களை நடத்துகின்றனர். இப்போராட்டங்களை மழுங்கடிப்பதற்காக அடக்குமுறைகளையும் பொலிஸ் அராஜகத்தையும் அரசுகள் பாவித்து வந்தன.
ஆனால் புதிய அரசு அதைவிட ஒரு படி மேலே சென்று, இந்த சாத்வீக போராட்டங்களில் ஒரு மத குருவாக, அடக்கப்பட்ட தமிழனாக கலந்து கொண்ட வேலன் சுவாமிகளை தாக்கியும் கைது செய்தும் உள்ளது.
வேறு பல மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் தாக்கப்பட்டும் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இவர்கள் செய்த தவறு என்ன? தமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நடத்தப்படும் சாத்வீகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது மட்டுமே.
ஆனால் இனவாதத்தை, இனத்துவேசத்தை கக்கும் பௌத்த தேரர்கள் சுதந்திரமாக தமது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். செயற்படுகின்றனர். இதுதான் பாரபட்சமற்ற ஆட்சியா? இவர்கள்தான் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களா? இந்த அடக்குமுறைகளாலும் பாரபட்சமாக நடாத்திய ஆட்சியாளர்களாலுமே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டது.
“மாற்றம்” என்ற தாரக மந்திரத்துடன் வந்த ஆட்சியாளர்கள் ஓன்றை உணர வேண்டும். மாற்றம் சொல்லில் மட்டும் இருந்து பலனில்லை மனதில், சிந்தனையில், செயலில் மாற்றம் வரவேண்டும். அதன்மூலம் தமிழர்களின் மனதை வெல்ல வேண்டும். இதை சர்வதேசம் உணர்ந்து கொள்ளவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.



