அதிகரிக்கும் சிங்களக் குடியேற்றங்களால் வவுனியா வடக்கிலிருந்து வெளியேறும் தமிழர்கள்; எம்.பி ரவிகரன்

0
33

வவுனியா வடக்கில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற்றங்கள் மற்றும் அபகரிப்புக்களைத் தடுக்குமாறும் தமிழ்மக்கள் தமது பூர்வீக நிலங்களில் வாழும் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். 

வவுனியா வடக்கில் தற்போது அதிகரித்துள்ள சிங்களக்குடியேற்றங்கள் மற்றும் காணி அபகரிப்பு நெருக்கடிகள் காரணமாக வவுனியா வடக்கிலிருந்து அதிகளவில் தமிழ் மக்கள் வெளியேறியுள்ளதாகவும், கிராமங்களில் மக்கள் இன்மையினால் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 23 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் மேலும் சில பாடசாலைகள் மூடப்படும் நிலையிலும் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமாகாணத்தில் அதிக பாடசாலைகள் மூடப்பட்ட கல்விவலயமாக வவுனியா வடக்கு கல்வி வலயம் காணப்படுகின்றது. அந்தவகையில் வவுனியா கல்வி வலயத்தில் 23 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிகளவில் பாடசாலைகள் மூடப்படுவதற்கு காரணமென்ன? அந்தக்காரணத்தினை அதிகாரிகளான நீங்கள் எம்மிடம் தெரிவித்தாலேயே எம்மாலும் அந்தப் பாரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக வவுனியா வடக்கில் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதால் எமது மக்கள் வெளியேறுகின்றனர்.

அத்தோடு பாடசாலைகளில் வளப்பற்றாக்குறைகளும் காணப்படுகின்றன. இந்தக் காரணங்களினாலேயே வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இவ்வாறு பாடசாலைகள் அதிகளவில் மூடப்பட்டுள்ளது – என்றார்.