தெரு நாய்களுக்கும் பாதீட்டில் கிடைத்த இடம்; அனுர அரசாங்கத்தால் அறிமுகமாகும் வசதி

0
44

நகர்ப்புறங்களில் பரவலாகக் காணப்படும் தெரு நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளைப் பராமரிப்பதற்கான முறையொன்றை உள்ளூராட்சி அதிகார சபைகளுடன் இணைந்து உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

வீதி நாய்களை பராமரித்தல், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் இறந்த பின்னர் அதனை அடக்கம் செய்தல் மற்றும் எரித்தல் ஆகியவற்றுக்காக பிலியந்தலை மற்றும் கெஸ்பேவ ஆகிய பகுதிகளில் செயற்திட்டம் ஒன்றை மேற்கொள்ள 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனுடன் செல்லப்பிராணிகள் இறக்கும் போது அவற்றை அடக்கம் செய்தல் அல்லது தகனம் செய்தல் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது எனவும் கௌரவமானதும், சூழல் நேசம் கொண்டதுமான பொறுப்பு வாய்ந்த மாற்றுவழிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.