அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் நாங்களும் கலந்து கொள்வோம் – நாமல் ராஜபக்ஷ

0
18

‘பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பதவிக்கு ஏற்றால் போல் சிறந்த எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் நாங்கள் கலந்துகொள்வோம்’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (31) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ’ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். சர்வாதிகாரத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு சகல எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பதவிக்கு ஏற்றால் போல் சிறந்த எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் நாங்கள் கலந்துகொள்வோம்.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை பழிவாங்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுகிறது. குறிப்பாக ராஜபக்ஷக்களை எந்த வகையில் நெருக்கடிக்குள்ளாக்கலாம் என்பதற்கு அரசாங்கம் அதிக காலத்தை செலவிடுகிறது.

எம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் நிரூபிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அப்போது தான் எமக்கு அடுத்த தேர்தல்களில் எவ்வித குற்றச்சாட்டுக்களுமில்லாமல் முன்னிலையாகலாம்’ என்றார்.