காஸா போர் நிறுத்தம் எதிராக வாக்களித்த அமெரிக்கா; உலக நாடுகள் கண்டனம்

0
24

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்த காஸா போர் நிறுத்த தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்ததால் காஸாவில் போர் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காஸாவில் இம்பெறுவது இனஅழிப்பு என்று ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், காஸாவில் போரை நிறுத்துவதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

தற்காலிக 10 உறுப்பு நாடுகள் இணைந்து கொண்டு வந்த இந்த தீர்மானத்தின்படி காஸாவில் உடனடி போர் நிறுத்தம், ஹமாஸ் பிடியில் உள்ள அனைத்துப் பணயக் கைதிகளையும் உடனடியாக விடுவிப்பது, காஸாவிற்குள் மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதியளித்து உள்ளிட்டவை அடங்கும்.

இந்த தீர்மானத்தின் மீது நிரந்தர உறுப்பு நாடுகள் ரஷ்யா, பிரான்ஸ், பிரித்தானியா, சீனா ஆதரவு தெரிவித்த நிலையில், அமெரிக்கா மட்டும் தனது வீட்டோ சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது. இதனால் தீர்மானம் தோல்வி அடைந்தது.

மொத்தமுள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் அமெரிக்கா மட்டும் எதிராகவும் வாக்களித்துள்ளன. அமெரிக்கா 6 ஆவது முறையாக இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே அது வெற்றி பெறும்.

இந்நிலையில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதற்கு இஸ்ரேல் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. காஸாவில் உள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் இஸ்ரேல் இராணுவம் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

காஸாவில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.