விடுதலைப் புலிகள் காலத்தை விட தேசிய பாதுகாப்பு மோசமாகிவிட்டது – சாகர காரியவசம்

0
21

விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தை விட மோசமான சூழ்நிலைக்கு நாடு நகர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் தற்போது நடைபெறும் கொலைகளை அரசாங்கம் சாதாரணமாக சித்தரிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் ஒரு பாசிச ஆட்சியை செயல்படுத்துவதாகவும் 1980ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட ஒரு சூழ்நிலையை நோக்கி நாடு நகர்ந்து வருவதாகவும் சாகர காரியவசம் கூறுகிறார்.

இந்த நாட்டில் கொள்கலன்கள் சம்பவத்தை முதலில் வெளிப்படுத்தியவர் படுகொலை கொலை செய்யப்பட்ட டான் பிரியசாத் என்றும் அவர் தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் சாகர காரியவசம் வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதம் தீவிரமாக இருந்ததை விட மோசமான நிலையை எட்டியுள்ளது. 1988-89 காலகட்டத்தில் ஜே.வி.பி.யின் பயங்கரவாத நிலையை நோக்கி நகர்ந்து வருவது இப்போது தெளிவாகத் தெரிகிறது.

நீதிமன்றத்தில் மக்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் காண்கிறோம். பொலிஸாரின் முன்னிலையில் மக்கள் கொல்லப்படுவதைக் காண்கிறோம். வீடுகளில் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

கொலைகளை மிகவும் பொதுவான விஷயமாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. கொல்லப்படுபவர்கள் போதைப்பொருட்களில் ஈடுபட்டவர்கள் அல்லது பாதாள உலகில் ஈடுபட்டவர்கள் என்று கூறி அரசாங்கம் மிக எளிதாக அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறது.

கொள்கலன் சம்பவத்தில் நடந்த மோசடியை முதன்முதலில் அம்பலப்படுத்திய டான் பிரியசாத் தனது சொந்த வீட்டிலேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலைகள் அனைத்தும் மிகவும் எளிமையான முறையில் மறைக்கப்படுகின்றன.

இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இந்த அரசாங்கம் உள்ளது. ஒரு பாசிச ஆட்சியை உருவாக்கும் நோக்கத்திற்கான முக்கிய அடிப்படை நிபந்தனை இதுதானா என்பதில் எங்களுக்கு பெரும் சந்தேகம் உள்ளது.

பாசிச ஆட்சியால் அதன் எதிரிகளை அடக்க முடியாதபோது அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்கள் மூலம் அவர்கள் கொலைச் செய்யப்படுகின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.