செம்மணி மனித புதைகுழியில் (Chemmani mass grave) இன்றும் சில மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதுவரையில் 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாள் யாழ்ப்பாணம் (Jaffna) நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.
34 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இரண்டு சிறுவர்களின் எச்சங்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதோடு நான்கு மண்டையோடுகள் தெரிகின்றன.
அதில் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. மொத்தமாக 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு பேருடைய மண்டையோட்டு தொகுதிகள் இன்னமும் துப்பரவாக அடையாளப்படுத்தப்படாமல் இருக்கிறது.
ஏற்கனவே செய்மதியில் காட்டப்பட்ட சந்தேகத்துக்கிடமான பிரதேசத்தில் நேற்று முதல் அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று ஒரு ஆடையை ஒத்த ஒரு சந்தேகத்திற்குரிய பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது அகழப்படவில்லை.
அது அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னரே அவை தொடர்பான மேலதிக விவரங்களை தெரிவிக்க முடியும் என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்துள்ளார்.