இந்தோனேசியாவில் தமிழர்கள் மூவருக்கு மரண தண்டனை

0
19

இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கும்படி அங்கு உள்ள இந்திய துாதரகத்திற்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ராஜு முத்துக்குமரன், செல்வதுரை தினகரன் மற்றும் கோவிந்தசாமி விமல்காந்தன், 37 ஆகியோர் இந்தோனேஷியாவில் தனியார் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணி புரிந்தனர்.

கடந்த 2024 ஜூலையில் இவர்கள் மூன்று பேரும் 104 கிலோ ‘மெத் ஆம் பெட்டமைன்’ எனும் போதைப்பொருளை கடத்த முயற்சித்ததாக இந்தோனேஷிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த மூவருக்கும் எதிரான வழக்கு இந்தோனேஷியாவின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி மூன்று பேருக்கும் மரண தண்டனை விதித்து இந்தோனேஷிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றின் இந்த தீர்ப்பு அந்த மூவரின் குடும்பத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் மரண தண்டனையில் இருந்து தங்கள் கணவரை காப்பாற்றக் கோரி அவர்களது மனைவியர் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சச்சின் தத்தா அமர்வு முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்தோனேஷிய சிறையில் உள்ள மூன்று பேருடன் அவர்களது மனைவியர் தொடர்பு கொண்டு பேச வசதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

மேலும் மரண தண்டனை பெற்றவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் இந்த விவகாரம் தொடர்பாக இந்தோனேஷிய அரசுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் பேச்சு நடத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.