யாழ்ப்பாணத்தில் கடற்தொழில் அமைச்சருடன் இளைஞர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டமையால் பரப்பரப்பு ஏற்பட்டது. பருத்தித்துறை – பொன்னாலை வீதி புனரமைப்பு பணிகளுக்காக கடந்த அரசாங்கம் நிதி ஒதுக்கி இருந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது வீதி புனரமைப்பு பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய மக்கள் சக்தியினர் தாம் புதிதாக புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பதாக காட்டுகின்றனர் என கூறியே பிரதேச இளைஞர்கள் கடற்றொழில் அமைச்சருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பொன்னாலை – பருத்தித்துறை கரையோர பிரதான வீதி புனரமைக்கும் பணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (13) இடம்பெற்றது. வல்வெட்டித்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்டச் செயலாளர் ம. பிரதீபன் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வினை முடித்துக்கொண்டு அமைச்சர் செல்லும் போதே இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.